மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ‌தீபாவ‌ளியை T.V‌யி‌ல் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.

"இந்தியத் தொலைக்காட்சிகளில்..." என்பது போய், தற்போது "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன...'' இதுதான் அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தற்போது அரைமணி நேரத்திற்கு 60 முறை ஒளிபரப்பப்பட்டு வரும் விளம்பரமாக உள்ளது.

`அனைத்து நிகழ்ச்சிகளையும் பாருங்கள். தீபாவளியைக் கொண்டாடுங்கள்' என்பதோடு நில்லாமல், ``தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவோர்... '' என்று கூறி ஒரு நீண்ட பெரிய பட்டியலையும் குறிப்பிடுவார்கள்.

அந்தப் பட்டியல் முழுவதும் பல கோடி ரூபாய் விளம்பரங்கள் என்பது டி.வி முன் பண்டிகை நாளில் தவமிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.

தீபாவளிப் பண்டிகை என்றால் பொதுவாக அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, வீட்டில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டு, புத்தாடை அணிந்து உரிய இனிப்பு உள்ளிட்ட பதார்த்தங்களை சாப்பிட்ட பின் கோயி‌ல்களுக்குச் சென்று வழிபடுவதாக இருந்தது ஒருகாலத்தில்.

ஆனால், இன்று தீபாவளி உட்பட அனைத்துப் பண்டிகைகளும் சில, பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் சிறப்பு நிகழ்ச்சிகளாய் மாறி சின்னாபின்னமாகிச் சிக்கித் தவிக்கிறது.

காலையில் எழுந்தவுடனேயே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு சேனல்களாக மாற்றி, மாற்றிப் பார்க்கும் நிலைதான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது எண்ணமுமாக உள்ளது.

பிரபல, முன்னாள், இந்நாள் - நடிகர், நடிகைகள், அவர்களின் நடிப்புலக அனுபவங்கள் (!?) அல்லது அவர்கள் காதல் மனைவியுடன் அவர்களது `தலைதீபாவளி அனுபவங்கள்' என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் (எந்த சேனல்களும் விதிவிலக்கல்ல) சினிமாவின் ஆதிக்கம் தொற்றிக்கொண்டாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

இதில் சில தொலைக்காட்சிகளில் `ஷூட்டிங் ஸ்பாட்' வேறு. நடிகர் - நடிகைகளின் தீபாவளியைப் பார்க்கும் ஆர்வத்தில் நம் வீட்டு தீபாவளிக் கொண்டாட்டங்களையல்லவா தொலைத்து விடுகிறோம்?

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது டி.வி.-க்கு விடுமுறை என்ற உறுதியை வீட்டிலிருப்பவர்கள் எடுத்து, கேபிளை ஒருநாளாவது எடுத்து விடுவது தான்.

அக்கம்-பக்கம் வீட்டில் இருந்து சத்தம் கேட்டால் கவலையில்லை.

குழந்தைகளுடன் அல்லது வீட்டிற்கு வரும் உறவினர்களுடன், வீட்டில் உள்ள தாய் - தந்தை, பாட்டி-தாத்தா உள்ளிட்ட மூத்தவர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து, தீபாவளியைக் கொண்டாடலாம். அனைவரும் ஒரே இடத்தில் விடுமுறையில் இருப்பதால், அவர்களை ஒட்டுமொத்தமாக சந்திப்பதே பெரிய நிலையாகி விட்ட இக்காலகட்டத்தில், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு கலந்து பேசி களிக்கலாம்.

அப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு தீபாவளியின் முக்கியத்துவமும், கொண்டாட்டங்களின் அனுபவங்களும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத கால கட்டத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளியின் மகிழ்ச்சி இப்போது இல்லை.

பட்டாசு கொளுத்துவது கூட டி.வி-யில் ஏதாவது செய்தி (!?) போன்ற பார்க்க விரும்பாத நிகழ்ச்சி வரும் போதுதான் என்பதை பெரும்பாலானோர் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.

தீபாவளிப் பண்டிகை மட்டுமல்ல. பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்துப் பண்டிகைகளின் போதும் இதே நிலைதான். சிறப்பு நிகழ்ச்சிகளை அளிப்பதன் மூலம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் பல்லாயிரம் கோடியை கல்லா கட்டி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அந்த நிகழ்ச்சிகளை வெறுமனே எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டபடியே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, வீணான நோயும், மூளை அழற்சியும், உடல் சோர்வும் ஏற்படுவதான் நாம் பெறும் பரிசாக உள்ளது.

மகிழ்ச்சி என்பது பண்டிகை நாட்களில் வீணாக டி.வி. முன் அமர்ந்திருப்பது அல்ல என்பதை பெரியவர்கள் உணர்வதுடன் மட்டுமல்லாமல், தங்கள் வீட்டில் உள்ள இளையோருக்கும் அதனை உணர்த்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மூலம் விருப்பம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. நல்ல கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.