மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு, நல்லாட்சியமைக்க அனைவர்க்கும் அழைப்பு.

சற்று நேரத்திற்கு முன்னர் சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.உலக அரசியல் வரலாற்றில் நான்காவது முறை பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். இதற்கு முன்னர் பிரித்தானியாவின் வில்லியம் எவர்ட் க்லெஸ்டன் நான்கு தடவைகள் பிரதமராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்ற வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 5,00,566 விருப்பு வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.பொதுத் தேர்தலில் 50,98,927 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் திகழும் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலில் நேர்மையும் கறைபடியாத கரங்களையும் கொண்ட சிறந்த தலைவராக நாட்டு மக்களின் பாராட்டுக்கு உரித்தான ரணில் விக்கிரமசிங்க, முதல் தடவையாக 1993 ஆண்டு மே 7 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.அப்போதைய ஜனாதிபதி டீ. பி. விஜேதுங்கவின் முன்னிலையிலேயே அன்று சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது. 22 வருடங்களுக்குப் பின்னர் தற்போது 22 ஆவது பிரதமராகப் பதவியேற்கின்றார்.

1993 ஆம் ஆண்டு அவர் பிரமராகப் பதவியேற்க முன்பதாக கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது முறையாக 2001 டிசம்பரிலும் மூன்றாவது முறையாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலும் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டவராவார்.

சுதந்திர இலங்கையின் பிரதமர்களாக டீ. எஸ். சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர். ஜோன். கொத்தலாவல, விஜயானந்த தஹநாயக்க. எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டார நாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன. ஆர். பிரேமதாச. டீ. பி. விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரத்னசிறி விக்ரமநாயக்க, டி. எம். ஜயரத்ன ஆகியோர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இலங்கையின் 15வது பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளுமென தெரிவிக்கப்பட்டபோதும் பெரும்பாலும் எதிர்வரும் வாரத்திலேயே புதிய அமைச்சரவையின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.