மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காவலர் குடியிருப்பு சொல்லப்படாத காதல் கதை

குப்பி படத்தின் மூலம் ஈழம் வரை கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவரது அடுத்தப் படைப்பு, காவலர் குடியிருப்பு. குப்பி போலவே இதுவும் உண்மைச் சம்பவம். முன்னது ரா‌ஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டது என்றால், பின்னது பாபர் மசூதி இடிப்பை மையமாகக் கொண்டது. பிறப்பால் கன்னடர் என்றாலும் தமிழார்வத்தில் ரமேஷ் பேசும் சுந்தர தமிழ் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கலாம் ரகம். இனி அவருடனான உரையாடல்...

காவலர் குடியிருப்பு பற்றிச் சொல்லுங்கள்...?

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாடெங்கும் ஏற்பட்ட கலவரம் பெங்களூருவிலும் நடந்தது. அப்போது பெங்களூரு போலீஸ் குவார்ட்டர்ஸில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கம்தான் இந்தப் படம். இதுவரை சொல்லப்படாத காதல் கதை இது.

தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை, அதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை படமாக்க என்ன காரணம்?

பொதுவாகவே நான் வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு இயங்க விரும்புகிறவன். சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் நான் படித்தேன். அதற்குப் பிறகு இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருடன் இணைந்து தொலைந்து போனவர்கள் சீ‌ரியல் எடுத்தேன். அந்த தொடரே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். ஆரம்பம் முதலே என்னுடைய கனவு வழக்கத்துக்கு மாறானதாகவே இருந்து வந்திருக்கிறது.

காவலர் குடியிருப்பு கதையை தேர்வு செய்ய என்ன காரணம்?

நண்பர் துவாரகநாத் தான் இந்த சம்பவத்தை என்னிடம் சொன்னார். நாட்டில் நடக்கிற மதக்கலவரங்கள் மரணம், கைது போன்ற நேரடி சேதங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணுக்கு தெ‌ரியாத பாதிப்புகளும் இருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அப்படிதான் இரு இளம் உள்ளங்கள் பாதிக்கப்பட்டன. பலருக்கும் தெ‌ரியாத விஷயம் என்பதால் அதை படமாக்க தீர்மானித்தேன்.

உண்மைச் சம்பவம் நடந்த இடத்திலேயே பல காட்சிகளை படமாக்கியிருக்கிறீர்களாமே?

1992ல் சம்பவம் நடந்த போலீஸ் குவார்ட்ட‌ர்ஸில் ஒரு மாதம் வரை படப்பிடிப்பை நடத்தினோம். நிஜ சம்பவத்தை பார்ப்பதுபோல் இருப்பதாகச் சொன்னவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நிஜக் கதை நடந்த வேறு சில இடங்களையும் அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். அங்கும் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பின் போது பழைய நினைவில் பலர் அழுதது மறக்க முடியாத அனுபவம்.

பின்னோக்கி பயணிக்கும் கதை என்பதால் படமாக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்குமே?

உண்மைதான். 1968, 1992, 2009 என மூன்று கட்டங்களில் கதை பயணிக்கிறது. அந்தந்த காலகட்டங்களுக்கேற்ற பொருட்களை, வாகனங்களை, உடைகளை பயன்படுத்த வேண்டும். அதை கலை இயக்குனர் சிறப்பாக‌‌ச் செய்திருக்கிறார். அதேபோல் மூன்று காலகட்டங்களையும் வேறுபடுத்தி காண்பிக்க மூன்று விதமான வண்ணங்களை ஒளிப்பதிவாளர் துவாரகநாத் பயன்படுத்தியிருக்கிறார். இது அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

உண்மை‌க் கதையை படமாக்கும்போது பாடல்கள் தேவையா?

காவலர் குடியிருப்பு ஆ‌க்சன் நிறைந்த நிஜ காதல் கதை. ஒரு காதல் படத்துக்கு பாடல்கள் முக்கியம். பாடலுக்கென்று தனிக் காட்சிகள் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. அதனால் பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் இடம்பெறுமாறு அமைத்திருக்கிறேன். பாடலுடன் சேர்ந்து கதை நகர்வதால் பாடலை பார்க்காவிட்டால் கதையின் தொடர்ச்சி பாதிக்கும். ரசிகர்களும் பாடல் காட்சிகளில் எழுந்து வெளியே போகமாட்டார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.