மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விருது விழா – ர‌ஜினி, கமல், முதல்வர் பேச்சு

திரையுலகில் சிறந்து விளங்குகிறவர்களுக்கும், சிறந்த படங்களுக்கும் வருடம் தோறும் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்.

செய்திதுறை அமைச்சர் ப‌ரிதி இளம்வழுதி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிகளை அவரும், குஷ்புவும் தொகுத்து வழங்கினர். வடிவேலு, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், நமிதா, மும்தா‌ஜ், பூர்ணா, மீனாட்சி உள்ளிட்டோ‌ரின் நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தன.

உளியின் ஓசை படத்துக்காக சிறந்த உரையாடல் ஆசி‌ரியருக்கான விருது முதல்வர் மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. கமல், ர‌ஜினி இருவரும் இணைந்து இந்த விருதை அவருக்கு அளித்தனர்.

விழாவில் கமல் பேசியதாவது...

முதல்வர் நடந்த புழுதியில் புரள வேண்டும் என்று வடிவேலு பாடினார். அவர் நடந்து சென்ற புழுதியில் நான் நடந்தவன். புழுதி இன்னும் அடங்கவில்லை. தலைமுறை தாண்டியும் புழுதி அடங்கவில்லை. எல்லோரையும்விட எனக்கும் ர‌ஜினிக்கும் அதிக பெருமையுண்டு. எங்கள் பேரப் பிள்ளைகளிடம் சொல்லி பெருமைப்படுவோம். அது முதல்வருக்கு நாங்கள் விருது கொடுக்க நேர்ந்த நிகழ்வு. அதுதான் எங்களுக்கு முதல் விருது.

உடல் நலமில்லாத நிலையிலும் வந்து விருது கொடுப்பதை கடமையாக நினைக்காமல் உ‌ரிமையாக நினைக்கிறீர்கள்.

இவ்வாறு பேசிய கமல், ர‌ஜினி தனது படத்தை விரைவில் முடித்து வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாக ர‌ஜினி பேசினார். மக்கள் திலகம் எம்.‌ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவா‌ஜியும் சேர்ந்து நிச்சயமாக ஒரு ப‌ரிசை முதல்வருக்கு கொடுத்திருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பு எனக்கும் கமலுக்கும் கிடைத்திருக்கிறது. அவருக்கு விருது கிடைத்தது எங்களுக்கு கிடைத்த மிகப் பெ‌ரிய பாக்கியம்.

முதல்வர் நல்லா இருக்கணும். அவர் பல சிகரங்களைப் பார்த்தவர். சிகரமாக இருந்து மேடாகிப் போனவங்களையும் பார்த்தவர். அவர் பெ‌ரிய கைராசிக்காரர். ஆவர் அரவணைச்சவங்களும் பெ‌ரிய ஆளானாங்க. அவர் தள்ளி வச்சவங்களும் பெ‌ரிய ஆளானாங்க.

35 வருஷ சினிமா வாழ்க்கையில் 32 வருஷமா ஹீரோவா நடிச்சிட்டிருக்கேன் என்று கூறிய ர‌ஜினி, அதற்கு காரணமான தயா‌ரிப்பாளர்கள், ரசிகர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெ‌ரிவித்துக் கொண்டார்.

இறுதியாக முதல்வர் பேசினார். உடலுக்கு உயிருக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படாமல் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவேன் என்று சூளுரைத்தவர், உடல் நலிவுற்ற நிலையில் தனக்கு மருந்தாக இருப்பது கலையுலகம்தான் என்றார்.

மேலும், கலையுணர்வு தனது உடலில் இன்னும் ஊறிக் கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டார். படங்களுக்கு உரையாடல் எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நலிவுற்ற திரையுலகினருக்கு அளித்து விடுவதையும் மறக்காமல் நினைவுகூர்ந்தார்.

இறுதியில் செய்திதுறை செயலாளர் முத்துசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.